ராஜஸ்தானில் 2 பழங்குடி இன மைனர் சகோதரிகள் பாலியல் பலாத்காரம்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மைனர் சகோதரிகள் இருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே இனத்தைச் சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள குண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவர், பைரா கிராமத்தில் கடந்த 6ம் தேதி மாலை பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அதே வழியாக வாகனத்தில் சென்ற வாலிபர்கள் மூவர் அச்சிறுமிகளை தாங்களே வீட்டில் கொண்டு போய் விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த வாலிபர்கள் சிறுமிகள் வசிக்கும் பகுதியிலேயே குடியிருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே பழக்கமாக அவர்களை நம்பி வாகனத்தில் ஏறியுள்ளனர் சிறுமிகள்.
ஆனால், சிறுமிகளை நேராக வீட்டிற்கு அழைத்துச் செல்லாத வாலிபர்கள் அவர்களை சைலா பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமிகள் நடந்ததை வீட்டில் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் இது தொடர்பாக சாடாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ஒரு மைனர் சிறுவன் உட்பட மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளுக்கு முறையே 15 மற்றும் 17 வயது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள படான் கிராமத்தில் இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. இந்நிலையில் ராஜஸ்தானில் பழங்குடி இன சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications