இந்து பனாரஸ் பல்கலை மாணவியர் மீது தாக்குதல்... இரு போலீஸார் பணி நீக்கம்!
இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் மாணவிகள் மீது நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இரண்டு போலீஸார் பணி நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர்.
லக்னோ: இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் மாணவியின் மீது சராமாரியாகத் தாக்குதல் நடத்திய இரண்டு போலீஸ்காரர்களை நீக்கியுள்ளனர். மேலும் கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் நீக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் இந்து பனாரஸ் பல்கலை கழகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஒருவரை கடந்த வியாழக்கிழமை இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட மாணவி மயக்கமடைந்துள்ளார். இந்த விஷயம் பல்கலை வளாகத்தில் பரவியதும் மாணவ, மாணவியர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கடந்த சனிக்கிழமை இரவு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார் மாணவியர் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்..
அதில் ஒரு மாணவி பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்த வீடியோவும் மாணவிகள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் வீடியோவும் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஆதித்யநாத் யோகி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து, மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய இரண்டு போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட் ஒருவரும் பணியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, இந்து பனாரஸ் பல்கலைக் கழக மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 'பெண் குழந்தைகளை காப்போம்' என்று பாஜக அரசு செய்து வரும் பிரச்சாரம் போலும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு காண வேண்டுமே ஒழிய, போலீஸ் அதிகாரத்தைக் கொண்டு அல்ல என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவாத்தையடுத்து பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications