டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த 'நொய்டா'வில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள்- திடுக் தகவல்!
நொய்டா: டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவே நொய்டாவில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவன். மற்றொருவன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான ரகதுல்லா மற்றும் அப்துல் ஆசிஸிடம் உளவுத்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த இரு தீவிரவாதிகளிடம் மத்திய உளவுத்துறை நடத்திய விசாரணையில், டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பிலும் இது தொடர்பான சதித் திட்ட விவரங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது மேற்கு வங்க பயங்கரவாத தடுப்புப் படையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாநில புர்த்வான் குண்டுவெடிப்பில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்திலும் சதித் திட்டங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் தேசியப் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications