மம்தா கூடாரத்தில் அடுத்த விக்கெட் ... மேலும் ஒரு எம்.எல்.ஏ . திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் தீபக் ஹல்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் எப்படியாவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.
பாஜகவின் தீராத ஆசை
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எப்படியவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.
அடுத்தடுத்து விலகல்
இதற்காக அமித்ஷா பல வியூகத்தை வகுத்து வருகிறார். அவர் வகுக்கும் வியூகம் நன்கு செயல்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா உள்பட 5 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகல்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு அடி கொடுக்கும் விதமாக இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் தீபக் ஹல்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான தீபக் ஹல்தார் இன்று கட்சியில் இருந்து விலகினார். ஆனால் அவர் பாஜவில் சேரும் முடிவில் இல்லை என தெரிகிறது.
என்ன காரணம்?
கட்சியில் இருந்து விலகியது குறித்து தீபக் ஹல்தார் கூறியதாவது:- நான் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், 2017 முதல் மக்களுக்காக சரியாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்த போதிலும், நிலைமையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்சி வேலைத்திட்டம் குறித்தும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனது தொகுதி மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை விரைவில் மாவட்ட மற்றும் மாநிலத் தலைவருக்கு அனுப்புவேன் என்று கூறினார்.