அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை
அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவஹாத்தி: அஸ்ஸாமில் 24 மணி நேரத்தில் இருவேறு இடங்களில் ஓடும் ரயிலில் கழிவறையில் 2 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் ரயில், அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் நேற்று புதன்கிழமை மதியம் ஜோர்ஹாத் மாவட்டம் மரியானி ரயில் நிலையத்தில் சென்றபோது, ரயிலின் கழிவறையில், அஸ்ஸாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தைச் சேர்ந்த லாலிமா தேவி(48) என்ற பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது கழுத்தைச் சுற்றி அஸ்ஸாமில் பாரம்பரியமாக அணியப்படும் கமுசா துணி இருந்துள்ளது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. லாலிமா தேவி திப்ருகாரிலிருந்து பீகாருக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல, அஸ்ஸாம் மாநில உள்ளூர் ரயில் ஒன்றில் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சிமலுகுரி ரயில் நிலையத்தில் ரயில் சென்றபோது, கழிவறையில், அதே சிவசாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகுமாரி(21) என்ற பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. இந்த பெண்ணின் கழுத்தச் சுற்றியும் அஸ்ஸாமின் கமுசா டவல் இருந்துள்ளது. இந்த பெண்ணும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ராதாகுமாரி ஜோர்ஹாத் மாவட்டத்தில் உள்ள அஸ்ஸாம் வேளாண்மை பல்கலையில் படித்துவந்துள்ளார். கோலாகாட்டில் அவருடைய உறவினரை பார்க்கச் செல்லும்போது இந்த கொலை நடந்துள்ளதாக அவருடை தாய் தாராதேவி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் நடைபெற்றுள்ள இந்த இரண்டு பெண்களின் கொலை ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அஸ்ஸாம் மாநில டிஜிபி பி.ஆர்.மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த இரண்டு கொலை வழக்குகளுக்கு இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்திவருகிறோம். இரண்டாவது கொலை தற்போதுதான் நடந்துள்ளது. இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி ஏதாவது கூறுவதற்கு முன்பு நாங்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கொலை சம்பவம் குறித்து, வடகிழக்கு ரயில்வே பொது மேலாளர் சஞ்சீவி ராய் கூறுகையில், "இது எப்படி நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்துவருகிறோம். இது ஒரு பைத்தியக்காரத்தனமான கொலை" என்று கூறியுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.