நாட்டை அதிர வைத்த உதய்பூர் படுகொலை.. "பாஜகவுடன் கொலையாளிகளுக்கு தொடர்பு.." பகீர் குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மிக விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், கடந்தாண்டு அங்கு உதய்பூரில் நடந்த டெய்லர் படுகொலை இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்தாண்டு இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையானது. பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கூறிய கருத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட டெய்லர் கன்னையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.
பாஜகவுடன் தொடர்பு: இந்த படுகொலை சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு வரவே சில வாரங்கள் வரை ஆனது. இதற்கிடையே ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த படுகொலை குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெய்லர் கன்னையா லால் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "அந்த கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருக்கிறது. கொலை சம்பவம் நடக்க சில நாட்களுக்கு முன்பு அதே நபர்களை போலீசார் வேறு ஒரு கேஸில் பிடித்தனர். அப்போது போலீஸ் நிலையம் வரை வந்து அந்த கொலையாளிகளை விடுவித்ததே பாஜக தலைவர்கள்தான்" என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
என்ன நிலைமை: மேலும், ராஜஸ்தானில் சில நாட்களில் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகவினர் திட்டமிட்டு வன்முறையைப் பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்பு ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கன்னையா லால் படுகொலையைக் குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதிகளுக்குக் காங்கிரஸ் அனுதாபம் காட்டுவதாகவும் விமர்சித்தார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி கூறுகையில், "கன்னையா லால் படுகொலை என்பது மாநில அரசுக்கு மிகப் பெரிய கறை. பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டும் காங்கிரஸ் அரசு இருப்பதால்தான் உதய்பூரில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது" என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ஏன் பேசுகிறார்கள்: அசோக் கெலாட் மேலும் கூறுகையில், "தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த பாஜக ஏதேதோ காரணங்களை உளறி வருகிறது. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்தும் சட்டங்கள் குறித்தும் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேர்தல் நடப்பதால் சும்மா வேண்டுமென்றே பிரச்சினையைக் கிளப்பும் வகையில் பேசுகிறார்கள்.

கன்னையா லால் கொலை வழக்கு விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. அவர்களை விட ராஜஸ்தான் போலீசார் சிறப்பாக விசாரித்திருப்பார்கள். விசாரணை விரைவாக நடந்து இருக்கும். ஆனால், கொலை நடந்த உடனேயே என்ஐஏ அவசர அவசரமாக விசாரிக்க வந்தார்கள். அப்போது அதற்குக் கூட நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில் என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரிவில்லை. ராஜஸ்தான் போலீசார் அதை விசாரித்திருந்தால் கொலையாளிகளுக்கு இந்நேரம் தண்டனை கிடைத்திருக்கும்.
பாஜக தலைவர்கள்: அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் நான் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக உதய்பூருக்குப் புறப்பட்டேன். ஆனால், பாஜகவினர் உதய்பூர் சம்பவத்தை அறிந்த பிறகும் பொறுமையாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட நபர்கள்தான் இப்போது தேவையில்லாமல் தேர்தல் வருவதால் இதைப் பற்றிப் பேசுகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications