'போலி' பட்டியலில் திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம்! யு.ஜி.சி. 'லிஸ்ட்' ரிலீஸ்!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகமும் 'இடம்' பிடித்துள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956 22(1)ன் படி, மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், சட்டப்பிரிவு 3ன் கீழ் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டு சட்டவிதி 22(3)ன் கீழ் யுஜசி பாடத்திட்டத்தின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் போன்றவை மட்டுமே பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
யுஜிசி 23வது சட்டபிரிவின்படி மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் அல்லாத எந்த ஒரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையினை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் யுஜிசி விதிமுறைகளை மீறி தங்களை பல்கலைக்கழகம் என அறிவித்திருக்கும் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்பட நாடுமுழுவதும் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகங்கள் எந்தவித டிகிரி படிப்பையும் நடத்த உரிமையில்லை என அறிவிக்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய பல்கலைக்கழகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு யு.ஜி.சி. அறிவித்துள்ளது.
மொத்தம் 21 போலி பல்கலைக் கழகங்களை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
இவற்றில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.