காங்கிரஸ் ஆட்சியில் குஜராத்தின் வளர்ச்சி 17%; மோடி ஆட்சியில் வெறும் 9% தான்: சரத்பவார்!!
மும்பை: குஜராத் மாநிலத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த பொருளாதார வளர்ச்சியைவிட மிக மோசமாகத்தான் மோடி ஆட்சிக் காலத்து பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில்,
பாரதிய ஜனதாவின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி. அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட. அவர் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்துக்கு மாறாக காந்திநகரிலேயே அவர் போட்டியிட வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் தாம் முன்பு போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஜஸ்வந்த்சிங்.. திறமையான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.. நல்ல நிதி அமைச்சர். சிறந்த நாடாளுமன்றவாதி.. அவரும் அப்படியே பந்தாடப்பட்டார்.
ஹிட்லராகிறார் மோடி...
மோடியைப் பொறுத்தவரையில் பாஜகவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். நாம் வரலாற்றில் ஹிட்லரை பார்த்திருக்கிறோம். அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரம் அனைத்தும் தம்மிடமே குவிந்திருக்க வேண்டும் என்று செயல்பட்டவர். அப்படி அதிகாரம் குவிந்ததால் யூதர்களை எப்படியெல்லாம் அவர் கொன்றொழித்தார் என்பதை இந்த உலகமே கண்டது.
இன்று அதே நிலைமைதான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் ஆகியோரெல்லாம் ஒதுக்கப்பட்டு மோடியின் வசம் அந்த கட்சி சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான்.
அன்றும் இன்றும் குஜராத்தின் வளர்ச்சி..
லோக்சபா தேர்தலில் நேரு-காந்தி பரம்பரை பற்றி கேள்வி எழவில்லை. நேரு-காந்தி சித்தாந்தமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் ஒற்றுமையின் அடையாளம், நாட்டின் மதச்சார்பின்மையின் அடையாளம் அவர்கள்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கால முதல்வர்களாக மாதவ்சிங் சோலங்கி, சிமன்பாய் படேல் இருந்தனர். அப்போது அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 16 முதல் 17.5% இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இது 9% ஆக குறைந்தது. இதுதான் சிறந்த நிர்வாகமா? ஏன் வளர்ச்சி விகிதம் குறைந்தது?
கடந்த கடைசி 3 ஆண்டுகாலத்தில் மகாராஷ்டிரா ரூ.1.42 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. ஆனால் ஏராளமான நிதி மாநாடுகளை நடத்துகிற குஜராத்தால் மகாராஷ்டிராவின் அளவில் 20% கூட ஈர்க்க முடியவில்லையே? அப்படியானால் எங்கே என்ன ஆட்சி நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது?
வாஜ்பாயோ இந்திரா காந்தியோ தங்களுக்காக ஓட்டுக் கேட்டதே இல்லை.. தங்களது கட்சிக்காக ஓட்டுக் கேட்டார்கள்.. ஆனால் மோடியோ எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்றார் சரத்பவார்.












Click it and Unblock the Notifications