அமைச்சரவை மாற்றம்: ஸ்மிருதி இரானியிடமிருந்த துறை குறைப்பு.. பியூஷ் கோயலுக்கு கூடுதலாக நிதித்துறை
மத்திய அமைச்சரவை திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பியுஷ் கோயல் நிதித் துறையை கூடுதலாக கவனிப்பார். ஸ்மிருதி இரானியிடம் இருந்த துறை பறிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நிதித் துறை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானியிடம் இருந்த செய்தி, ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 மே மாதம் பொறுப்பேற்றது. 2014 நவம்பர், 2016 ஜூலை மற்றும் 2017 செப்டம்பரில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 2017 ஜூலையில் அமைச்சரவையில் துறைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஐந்தாவது முறையாக மத்திய அமைச்சரவையில் இன்று இரவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால், அவர் பணிக்கு திரும்பும்வரை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நிதித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்த செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக உள்ள ராஜ்யவர்தன் ரதோட் செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் துறை இணையமைச்சராக இருந்த எஸ் எஸ் அலுவாலியா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை அந்த துறையை கவனித்து வந்த அல்போன்ஸ் கன்னன்தனம், சுற்றுலா துறை இணையமைச்சராக தொடருவார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.