”அப்போ அவங்கதான் காரணமா?” அசாமில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு Y+ பாதுகாப்பு அளித்த மத்திய அரசு
கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்களில் 15 பேருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.. உங்களால் முடிந்தால் இதை பண்ணுங்க! ஆதித்ய தாக்கரே ஒபன் சேலன்ஞ்
பாஜக திட்டம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.
அணி தாவிய எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.
உத்தவ் தாக்கரே கருத்து
இந்த நிலையில் பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் இதை உறுதிபடுத்தி இருக்கிறார்.
பாதுகாப்பு நீக்கம்
இந்த நிலையில், அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Y பிளஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் அசாமில் முகாமிட்டு இருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு Y+ பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு அனுமதியளித்து இருக்கிறது. 39 எம்.எல்.ஏக்கள் அசாமில் உள்ள நிலையில் அவர்களில் 15 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது. அதன் அடிப்படையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.