மணிப்பூரில் அமித்ஷா தீவிர ஆலோசனை- நீடிக்கும் வன்முறை- 24 மணிநேரத்தில் 10 பேர் படுகொலை!
இம்பால்: இன வன்முறை நீடிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார். மணிப்பூர் மாநிலத்துக்கு 4 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பைரேன்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
மணிப்பூரில் நாகா, குக்கி பழங்குடி இன மக்களுக்கும் மைத்தேயி இனமக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. நாகா, குக்கி பழங்குடிகளைப் போல மைத்தேயி இன மக்களைப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் முயற்சிக்கு எதிராக இந்த வன்முறை வெடித்தது.

மைத்தேயி இனமக்களை குறிவைத்து குக்கி இனமக்கள் தாக்குதல்கள் நடத்தினர். இதில் மைத்தேயி இன மக்கள் உயிரிழந்தனர். தங்களது வீடுகளை விட்டு அகதிகளாக மணிப்பூர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். குக்கி இன மக்களுடன் பயங்கரவாதிகளும் சேர்ந்து மைத்தேயி மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்பது மணிப்பூர் மாநில அரசின் குற்றச்சாட்டு. மணிப்பூரில் இதுவரையிலான வன்முறைகளில் மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 40 பேர் பயங்கரவாதிகள் என அம்மாநில முதல்வர் பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்துக்கு 4 நாட்கள் பயணமாக நேற்று வருகை தந்தார். முதலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பைரேன்சிங் உள்ளிட்டோரை சந்தித்து அமித்ஷா பேசினார். இன வன்முறைகளின் பின்னணி குறித்து அமித்ஷாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில அமைச்சர்கள் உயர் அதிகாரிகளை அமித்ஷா சந்தித்து பேசினார்.
தற்போதைய நிலையில் மணிப்பூரில் ஆயுதங்களை ஏந்தி இருக்கும் குக்கி இனமக்கள், மாநில அரசு பாதுகாப்புக்கு உறுதி அளித்தால் அவற்றை கைவிடுவதாக கூறுகின்றனர். அதேநேரத்தில் மணிப்பூர் மாநிலத்துக்குள்ளேயே மைத்தேயி இனமக்கள் தலையீடு இல்லாத தன்னாட்சி கவுன்சில் அல்லது தனி மாநிலம் ஒன்றை தங்களுக்கு உருவாக்க வேண்டும் என்பதும் குக்கி இனத்தவர் கோரிக்கை. இது தொடர்பாகவும் மாநில அரசுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் தன்னாட்சி கோரிக்கையை முன்வைத்து ஆயுதம் ஏந்தும் நிலையில் சில பகுதிகளை ஒருங்கிணைத்து தன்னாட்சி கவுன்சில் அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு உருவாக்குவது மத்திய அரசின் பாணி. இதனையே மணிப்பூரிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் அமித்ஷா முகாமிட்டிருந்த போதும் கூட வன்முறை ஓயவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications