இடஒதுக்கீடு முறை குறித்து விவாதிக்க வேண்டுமாம்...: சொல்வது மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா
லக்னோ: தற்போதைய ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
"எங்களுக்கு இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டை ஒழி" என்று குஜராத்தில் படேல் சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் ஊக்கம் கொடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்தப் போராட்டத்தை முன்வைத்து நாடு முழுவதும் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் வகையில் இடஒதுக்கீடு முறையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்துத்துவா அமைப்பு தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், இடஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில் மற்றொரு மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசியலமைப்பு சட்டப்படி தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையை பா.ஜ.க. முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால் தற்போது பல மாநிலங்களில் இடஒதுக்கீடு கோரி பல்வேறு ஜாதி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நாடு தழுவிய அளவில் கருத்து கேட்பு அல்லது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி தற்போதுள்ள இடஒதுக்கீட்டை பா.ஜ.க. ஆதரிக்கிறது. ஆனால் போராட்டங்கள் அடிக்கடி நடப்பதால், இந்தப் பிரச்சினைக்கு விவாதித்து தீர்வு காண வேண்டியது அவசியம்.
இவ்வாறு கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.












Click it and Unblock the Notifications