விவசாயிகள் போராட்டம் : எனது டிரைவர் அடித்து கொலை.. நான் அந்த இடத்திலேயே இல்லை.. அமைச்சர் மகன்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காரை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தான் அந்த இடத்திலேயே இல்லை என ஆஷிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியில் தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுடன் விவசாயச் சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி எல்லைகள் மட்டுமல்லாது பல விவசாயிகள் ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

லக்கிம்பூர் கேரி
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மாநில பாஜக தலைவர்களின் வாகனங்கள் வழிமறித்து அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
இந்த நிலையில் இந்த போராட்டத்தின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் காருக்கும் விவசாயிகள் கருப்புக் கொடியை காட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு விவசாயிகள் பலியாகிவிட்டனர்.

எஃப்ஐஆர்
இதையடுத்து ஆவேசமடைந்த விவசாயிகள்- பாஜக இடையே வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் புகாரின் பேரில் ஆஷிஷ் மிஸ்ரா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஷிஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

கார் ஏற்றுதல் பொய்
அவர் கூறுகையில் விவசாயிகள் போராட்டத்தின் நான் காரை ஏற்றியதாக சொல்லப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. ஞாயிற்றுக்கிழமை அந்த சம்பவம் நடந்த போது நான் அந்த இடத்தில் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பன்பிர்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்வில் காலை 9 மணி முதல் மாலை வரை கலந்து கொண்டேன். எனது டிரைவர் ஹரியோம் மிஸ்ரா காரை எடுத்து கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தும் வழியாக சென்றார்.

கார் டிரைவர்
அப்போது விவசாயிகள் என சொல்லிக் கொண்ட சிலர் கார் டிரைவர் மீது கற்களை வீசினர். இதனால் தலையில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதுதான் அந்த விபத்திற்கு வழிவகுத்தது. மற்றபடி வேண்டுமென்றே டிரைவர் காரை ஏற்றவில்லை. இவர்கள் கற்களை வீசியதால் தலையில் காயத்துடன் பலியாகி கிடந்த டிரைவரை வெளியே இழுத்து போட்டு கட்டைகளாலும் தாக்கியுள்ளனர்.

வீடியோ ஆதாரம்
இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. யோசித்து பாருங்கள், நான் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நான் எப்படி உங்கள் (நிருபர்கள்) முன்னால் பாதுகாப்பாக நின்றிருப்பேன்? காரையே எரித்துள்ளார்கள். ஆனாலும் எனக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படவில்லை என்றால் என்ன அர்த்தம். நான் அந்த இடத்தில் இல்லை என்றுதான் அர்த்தம் என தனது தரப்பு விளக்கத்தை ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications