டார்வினின் பரிணாம வளர்ச்சி கூற்று தவறாம்... விஞ்ஞானத்துடன் வீம்பாக மோதும் மத்திய அமைச்சர்
டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக சர்வதேச அளவில் விவாத நிகழ்ச்சி நடத்தினால் உண்மை வெளியாகும் என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் மீண்டும் கூறியுள்ளார்
டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடர்பான கூற்று தவறு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சத்யபால் சிங், விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டதை போல தன்னுடைய கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்று கூறியுள்ளார்
குவஹாத்தி: டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடர்பான கூற்று தவறு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சத்யபால் சிங், விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டதை போல என்னுடைய கருத்தை நான் வாபஸ் பெறப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சத்யபால் சிங், டார்வினின் பரிணாமக்கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என்றுகடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதனை கல்விப் பாடமுறையிலிருந்து மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவரின் கருத்திற்கு விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்துக்கொண்டு இவ்வாறான தவறான கருத்தை பரபரப்ப கூடாது எனவும் அமைச்சருக்கு கண்டனங்கள் எழுந்தன.
தவறான கருத்தை பரப்பாதீர்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள அமைச்சரே இவ்வாறான கருத்துகளை பரப்புவது ஏற்படையதல்ல என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் அமைச்சரின் இந்த கருத்தால் குழப்பம் நிலவும் எனவும், அறிவியல் சார்ந்தோர் மற்றும் விஞ்ஞானிகளிடம் இவ்விவகாரம் குறித்து விவாதித்து விட்டு இவ்வாறான கருத்துகளை அமைச்சர் வெளியிட்டிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
கருத்தில் மாற்றமில்லை
இந்நிலையில் அசாம் மாநில தலைநகர், கவுஹாத்தியில் பேசிய அமைச்சர் சத்யபால், தனது கருத்தில் தாம் தற்போதும் திடமாக இருப்பதாக கூறினார். மேலும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை என்று கூறினார்.
டார்வினுக்கு எதிர்ப்பு
டார்வின் காலத்திலேயே பல விஞ்ஞானிகள் இவரின் கருத்தை எதிர்த்ததாக கூறிய அமைச்சர், அந்த எதிர்ப்பு தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறினார். அவரின் காலத்திலேயே அவரின் கூற்றுக்கு உரிய பதிலை டார்வின் தரவில்லை என்று கூறிய அமைச்சர், இந்த விஞ்ஞான காலத்தில் அந்த கூற்றை பொய் என்று நிரூபிப்பது மிக சுலபம் என்றும் கூறினார்.
சர்வதேச விவாதம் தேவை
இதனை நிரூபிக்க சர்வதேச அளவில் விவாத நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், அதில் அனைத்து வகை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அப்போது தான் டார்வினின் கூற்று குறித்த உண்மை வெளிவரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விவாதத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தால், பல உண்மைகள் வெளிவரும் என்றும் அமைச்சர் சத்யபால் தெரிவித்தார்.
பாடத்திட்டத்தில் மாற்றமா?
குழந்தைகளுக்கு தவறான ஒன்றை கற்றுக்கொடுப்பது போல வரலாற்று பிழை ஏதுமில்லை என்று கூறிய அவர், பாடத்திட்டங்களில் தவறான கருத்துகளை போதிப்பது தவறு என்றார். சர்வதேச அளவிலான விவாத நிகழ்ச்சிக்கு பிறகு டார்வின் கருத்தை நீக்குவதா இல்லையா என்பது முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.