சிறார் சட்டத்திருத்த மசோதா: ராம் ஜெத்மலானி, பிருந்தா காரத் எதிர்ப்பு
டெல்லி: சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா தேவையற்றது என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார். 16 வயது சிறுவர்களை வயது வந்தவர்களாக நடத்துவது பிற்போக்குத் தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பிருந்தா காரத் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி சனிக்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டுள்ளான். இந்த நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைவதால், அதற்குள் இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறைப்பது தொடர்பான மசோதா குறித்து ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளது. தன்னை சந்தித்த நிர்பயாவின் பெற்றோர்களிடமும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இதனை தெரிவித்தார். இதனால், சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்நிலையில், இந்த மசோதா தேவையற்றது என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசோதா நிறைவேற்றப்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இந்த மசோதா நிறைவேற்றப்படக் கூடாது. ஒரே ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. அதனால் சட்டத்திருத்த மசோதா தேவையற்றது. என்றார்.
அதேபோல இந்த சட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் வாதம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 16 வயது சிறுவர்களையும் நீங்கள் கிரிமினல்களுடன் திகார் சிறைக்கு அனுப்ப போகிறீர்களா? என்ன ஒரு பிற்போக்குத்தனமான புரிதல். 16 வயது சிறுவர்களை வயது வந்தவர்களாக நடத்துவது முற்றிலும் தவறானது. நாங்கள் இதனை முற்றிலுமாக எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications