உ.பி.யில் அக்கிரமம்: மருந்து வாங்கி வந்த 55 வயது பெண் 3 பேரால் பலாத்காரம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மருந்து வாங்கி வந்தபோது 55 வயது பெண் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சிறுமிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் முதல் மூதாட்டி வரை பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். உங்கள் மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் இப்படி அதிகரித்துக் கொண்டே போகிறதே என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கேட்டால் அவரோ, மீடியாக்கள் என் மாநிலத்தை மட்டும் தான் கவனிக்கின்றன என்று பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் அகிலேஷின் மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ராஜ்புரா பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய அவரை சோம்வீர், ஹரிபாபு, கிஷண் ஆகியோர் அருகில் இருந்த வயலுக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.