ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்க்கும் வழக்கு: அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில் இந்துக்களும் வழிபடலாம் என்ற வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் விவகாரம் வெடித்த போது நாட்டின் பல மாநிலங்களிலும் மசூதிகளைக் குறிப்பிட்டு கோவில்கள் இருந்ததாக சர்ச்சைகள் வெடித்தன. உ.பி. வாரணாசியில் ஞானவாபி மசூதியே இந்துக்கள் கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல மதுரா மசூதியும் கோவிலை இடித்து கட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்நாட்டிலோ இந்து கோவில்களே பவுத்த விகாரைகள் மீதுதான் கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதில் ஞானவாபி மசூதி விவகாரம்தான் தற்போது பெரிதாக விவாதப் பொருளாகி இருக்கிறது. ஞானவாபி மசூதி, இந்து கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதா? என்பதை தொல்லியல் துறை கண்டறிய வாரணாசி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பது உள்ளிட்டவை விரிவாகவே விவரிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவன், விஷ்ணு, ஹனுமன் சிற்பங்கள், சிலைகள், தூண்கள் என ஞானவாபி மசூதிக்குள் கிடைத்தவை குறித்து தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் எனவும் வாரணாசி மாவட்ட மாஜிஸ் திரேட் நீதிமன்றம் அதிரடி உத்தரவை அண்மையில் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியின் அடித்தளப் பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்தினர்.
இதனிடையே ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதித்த வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையினரும் முஸ்லிம்கள் தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை சார்பாக மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தார். முஸ்லிம்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நக்வி ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications