வகுப்புவாத சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்த உ.பி. மக்கள்: முதல்வர் அகிலேஷ் பெருமிதம்!
லக்னோ: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் வகுப்புவாத சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கும், மைன்புரி லோக்சபா தொகுதிக்கும் கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மைன்புரி தொகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ராஜினாமா செய்த தொகுதியாகும்.
அதேபோல இந்த மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகிவிட்டதால் ராஜினாமா செய்த 11 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
புறக்கணித்த பகுஜன்
இத்தேர்தலை பகுஜன் சமாஜ்கட்சி புறக்கணித்தது. இதனால் ஆளும் சமாஜ்வாடி மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் இருந்தது.
மைன்புரியில் சமாஜ்வாடி
இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றது.
பாஜக தோல்வி
11 சட்டசபை தொகுதிகளில் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அகிலேஷ் கருத்து
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் பிரிவினை மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர் என்றார்.
தக்க பதிலடி
மேலும் வகுப்புவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை மாநில மக்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டியிருக்கின்றனர். மதவாத சக்திகளை தோற்கடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பொறுப்புடன் செயல்படுவோம்
அத்துடன் மதவாத சக்திகள் வெறுப்பு பரப்பி உயரத்திற்கு செல்ல முயற்சித்தன. ஆனால் மக்கள் தங்களுடைய வாக்கை கொண்டு மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர். உத்தரப்பிரதேச அரசு மட்டுமே வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறது. தேர்தலை அடுத்தும் இந்த வழியில் சமாஜ்வாடி அரசு செயல்படும். பொறுப்புடன் செயல்படும் என்றும் அகிலேஷ் கூறினார்.