குலுக்கலில் யார் ஜெயிக்கிறீங்களோ அவுங்கதான் கவுன்சிலர்.. உ.பி. உள்ளாட்சி தேர்தலில் அடடே
லக்னோ: தேர்தல் சர்ப்ரைஸ்கள் லோக்சபா தேர்தலிலோ, சட்டசபை தேர்தலிலோதான் நடக்க வேண்டும் என்று இல்லை, உள்ளாட்சி தேர்தல்களிலும் நடககலாம் என்பதற்கு நல்ல உதாரணம், உத்தரபிரதேசம்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. இதில் சில சுவாரசிய சம்பவங்கள் நடந்தன
மதுரா மாநகராட்சி, வார்டு எண் 56ல் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீரா அகர்வால் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் டிரா
பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருமே 874 வாக்குகளை பெற்றிருந்தனர். எனவே, குலுக்கல் முறையை தேர்ந்தெடுத்தனர் தேர்தல் அதிகாரிகள். இதில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சுயேட்சையிடம் தோல்வி
குலுக்கல் முறையில் ஜெயித்த மகிழ்ச்சி முடிவதற்குள், மாலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாஜகவின் மையா திரிபாதி கோரக்பூர் வார்டு எண் 68ல் தோல்வியை தழுவினார். அவரை வென்றது சுயேட்சை வேட்பாளர் நாதிரா.
கோரக்நாதர் கோயில்
கோரக்பூரின் 68வது வார்டில்தான் புகழ்பெற்ற கோரக்நாதர் ஆலயம் உள்ளது. கோரக்பூர்தான், உத்தரபிரதேச மாநில, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியும் ஆகும்.
பாஜகவுக்கு ஆதரவாம்
சுயேட்சையாக இருந்தாலும், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயார் என்கிறார் நாதிரா. அதேநேரம், பாஜகவினரோ, காங்கிரஸ் இந்த வார்டில் போட்டியிடவில்லை என்பதால் தோல்வியில் இருந்து மனதை தேற்றிக்கொண்டுள்ளனர்.