உபி.யில் ஆட்டோவில் சென்ற அமெரிக்க மாணவியிடம் பாலியல் வன்முறை: 3 பேர் கைது
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற அமெரிக்க மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் துலியாகன்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர் தனியாக பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார் அப்பெண். ஆனால், அவரது சத்தம் வெளியே கேட்காத வண்ணம் ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர் குற்றவாளிகள். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்பெண்ணை அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த காமுகர்கலிடம் இருந்து தப்பிக்க எண்ணிய அம்மாணவி, குவைசர்பாக் என்னும் பகுதிக்கு அருகே ஆட்டோ மெதுவாக சென்றப்போது கீழே குதித்துள்ளார். மாணவி குதித்த வேகத்தில் ஆட்டோ எண்ணையும் குறித்து வைத்துள்ளார். ஆனால், ஆட்டோ நின்றால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சி பறந்து சென்று விட்டதாம்.
உடனடியாக காவல் நிலையம் சென்ற அம்மாணவி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூவர் மீது புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் வீரு மற்றும் அவரது நண்பர்கள் ராஜன், ஆயுஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
முதலில் புகாரை பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து மிரட்டி அனுப்பி விடுவதாக போலீசார் கூறியதாகவும், பின்னர் மாணவியின் வற்புறுத்தலாலேயே புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.