ஹத்ராஸ் 122 பேர் பலி- 6 பேர் கைது- மெயின் குற்றவாளி சாமியார் இல்லையாம்..உ.பி. அரசு திடீர் அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேரை பலி கொண்ட சம்பவத்துக்கு காரணமானவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். முக்கியமான குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பிரசங்கம் வழங்கிய சாமியார் போலோ பாபா குறித்து விசாரணை நடத்தி பின்னரே முடிவு செய்வோம் என்றும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலோ பாபா சாமியாரின் பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80,000 பேர்தான் பங்கேற்க முடியும். ஆனால் சுமார் 2.5 லட்சம் பேரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பங்கேற்க அனுமதித்துள்ளனர்.

இந்த பிரசங்கம் முடிவடைந்ததும் சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக அத்தனை கூட்டம் ஒரு சேர முயற்சித்தது. இதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 122 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உ.பி. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் பெயர்கள்தான் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் 122 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் போலோ பாபா சாமியார் தொடர்பாக முதலில் விசாரணைகள் நடத்தப்படும். அதன் பின்னரே மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்போது தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார் போலோ பாபா சாமியார் . இவர் மீது ஏற்கனவே 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பல நகரங்களில் பதிவாகி இருக்கின்றன. ஆனால் உ.பி. போலீசார் பலாத்கார வழக்குகளில் போலோ பாபா சாமியார் மீது நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக நடமாட விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications