நான் பார்வதியின் அவதாரம்! சிவனை மணமுடிக்க வந்துள்ளேன்! இந்தோ-திபெத் எல்லையில் பெண்ணின் அக்கப்போர்
டேராடூன்: ‛‛நான் பார்வதியின் அவதாரம். சிவபெருமானை திருமணம் செய்ய வந்துள்ளேன்'' எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ-திபெத் எல்லையில் இருந்து திரும்ப மறுத்த பெண்ணால் எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் சிரமத்துக்கு உள்ளாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஹர்மீந்தர் கவுர் (வயது 27). இவர் தனது தாயுடன் இமயமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி மே 10ல் உத்தகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லை பகுதிக்கு சுற்றுலா சென்றார். கைலாஷ்-மானசரோவர் செல்லும் பாதைக்கு சென்றவர்கள் ஓம் பர்வத மலையை பார்வையிட விரும்பினர்.

15 நாள் அனுமதி
இந்த இடத்துக்கு செல்ல அனுமதியில்லை. இதனால் இருவரும் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். அவர்களுக்கு தார்ச்சுலா எஸ்டிஎம் மூலம் இன்னர்-லைன் அனுமதி வழங்கப்பட்டது. அதாவது அது தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து அப்பகுதியை பார்வையிட15 நாட்கள் அனுமதி பெற்று இருவரும் சென்றனர்.

நாபிதாங்க் பகுதியில்...
இருவரும் தார்ச்சுலா சப் டிவிஷனில் உள்ள கலாபானி பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாபிதாங்க் கிராமத்தில் உள்ள விடுதியில் தங்கி அந்த பகுதியை பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் வழங்கப்பட்ட அனுமதி மே 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து திரும்ப வேண்டும். ஆனால் இருவரும் திரும்பி வரவில்லை. சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்தனர்.

பார்வதியின் அவதாரம்
இதுபற்றி அறிந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் இளம்பெண் மறுத்துவிட்டார். மேலும், அவர் ‛‛ நான் பார்வதியின் அவதாரம். சிவபெருமானின் தரிசனத்திற்காக இங்கு வந்துள்ளேன். கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானை திருமணம் செய்யவே இங்கு வந்துள்ளேன். இங்கிருந்து திரும்ப மாட்டேன்'' என கூறினார்.

தற்கொலை மிரட்டல்
இதையடுத்து மூவர் கொண்ட போலீசார் அங்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த பெண்ணின் தாய் அங்கிருந்து புறப்பட ஒப்புக்கொண்டார்.மாறாக அந்த பெண் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். மேலும் தன்னை வற்புறுத்தினால் மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதாகவும் மிரட்டினார்.

மீட்பு; விசாரணை
இதையடுத்து டாக்டர் அடங்கிய ஒரு குழு அங்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இளம்பெண்ணை பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் வலுக்கட்டாயமாக மீட்கப்பட்டு தார்ச்சுலாவில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications