மோடியின் மாஸ்டர்ஸ்ரோக்கால் 5வது நாளாக முடங்கிய லோக்சபா: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வராததால் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்று இன்று மக்களவை கூடியதும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து விவாதிக்க மோடி மக்களவை வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மோடி மக்களவைக்கு தொடர்ந்து வராமல் இருப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இன்று அவை துங்கியதுமே காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அவையின் நடுப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.