சாரத்தின் மேல் ஏறி செல்ஃபி எடுக்கையில் விபரீதம்: படுத்தபடுக்கையான 2 இளம்பெண்கள்
பனாஜி: கோவாவில் உள்ள கடற்கரை கிராமமான அன்ஜுனாவில் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்த 2 பெண்களின் இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போனது.
இளம் தலைமுறையினர் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறார்கள். பலர் ஆபத்துகளையும் கண்டுகொள்ளாமல் உயரமான கட்டிடங்கள், கால்வாய்கள், அணைகளில் ஏறி செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி செல்ஃபி எடுக்கையில் சிலர் கால் தவறி விழுந்து பலியாகின்றனர்.

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராமமான அன்ஜுனாவுக்கு 20களில் இருக்கும் இரண்டு இளம் பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுத்தனர்.
செல்ஃபி எடுக்கையில் அவர்கள் இருவரும் கால் தவறி சாரத்தில் இருந்து தரையில் விழுந்தனர். இதில் இருவருக்கும் முதுகு எலும்பில் பலமான அடிபட்டது. இருவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த 2 பெண்களின் முதுகு எலும்பிலும் பலத்த அடி பட்டுள்ளதால் அவர்களின் இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்கள் இனி வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளனர்.
அந்த 2 பெண்களின் விபரங்களை வெளியிட மருத்துவமனை மறுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications