அமெரிக்கா தேர்தல் 2016: டிரம்ப் வெற்றிக்கு மும்பையில் சிறப்பு யாகம்.. ஹிலாரிக்காக இலங்கையில் வழிபாடு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டி மும்பை கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மும்பை: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
வெற்றிகாக வாக்காளர்களை கவர இருவரும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். ஹிலாரியே இப்போது முன்னணியில் இருக்கிறார் என்றாலும் யாரை அதிபர் பதவியில் அமரவைப்பது என்பது அமெரிக்க வாக்காளர்களின் கைகளில் இருக்கிறது.
குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்பின் சின்னம் யானை. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியின் சின்னம் கழுதை. இந்த தேர்தலில் யானையா? கழுதையா? எந்த சின்னத்தில் வாக்காளர்கள் முத்திரையிடுவார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்தியர்கள் எதிர்பார்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்து சேனா அமைப்பினர் டிரம்ப் வெற்றிக்காக யாகம் நடத்தினர். இப்போது மும்பையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டி மும்பை கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

வெற்றிக்காக டிரம்புக்கு யாகம்
வடக்கு மும்பை பகுதியில் உள்ள விஷ்ணுதாம் ஆலயத்தில் 3 மணி நேரம் இரண்டு யாகங்கள் நடத்தப்பட்டன. ஒன்று டிரம்ப் வெற்றிக்காகவும் மற்றொன்று அமெரிக்காவில் அதிபராக பதவியேற்கவும் இந்த யாகங்கள் நடத்தப்பட்டதாக ஆலயத்தின் டிரஸ்டி ரமேஷ் ஜோஷி கூறினார். அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கு நன்மை
டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் என்றும் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பார் என்றும் அந்த அமெரிக்க வாழ் இந்தியர் கூறியதாகவும், யாகம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

ஹிலாரி வெற்றிக்கு பிரார்த்தனை
இதனிடையே அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கதிர்காமம் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்த இலங்கை தமிழர்கள், தேவலாயங்களில் 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர். அமெரிக்காவை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications