டஜன் கணக்கில் அதிருப்தியில் உ.பி. பாஜக தலைவர்கள்! சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி முகம்?
லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அதிரடி வெற்றியை குவித்த பாரதிய ஜனதாவால் எதிர்வரும் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெல்ல முடியுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இதனாலேயே மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கவும் முடிந்தது.
பாரதிய ஜனதாவின் இந்த அபார வெற்றிக்கு உத்தரப்பிரதேச பொறுப்பாளராக இருந்த அமித்ஷாதான் காரணம் என்றெல்லாம் புகழாரம் சூட்டப்பட்டது. இந்த பெருமிதம் எல்லாம் 2 மாதங்களுக்குள் தவிடுபொடியாகிப் போனது.

உத்தர்காண்ட் அனுபவம்
ஏற்கெனவே உத்தர்காண்ட் மாநிலத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸே வென்றது. பாஜக வென்ற தொகுதிகளைக் கூட காங்கிரஸ்தான் கைப்பற்றியது.
வெல்ல முடியுமா?
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலில் பெற்ற அறுவடை அளவுக்கு இம்முறை கிடைக்குமா என்பது பாஜக தலைவர்களுக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது.
அதிருப்தியில்...டஜன் தலைவர்கள்
உத்தரப்பிரதேச பாரதிய ஜனதாவில் அத்தனை உள்குழப்பம்.. குத்து வெட்டு கதைதான்.. பாஜகவின் மூத்த தலைவர்களான லால்ஜி தாண்டன், கல்யாண்சிங், வினய் கட்டியார், சதீஷ் மகானா, ஓம் பிரகாஷ்சிங், ராம்நாத் கோவிந்த், குமார் மன்வேந்திராசிங் என டஜன் கணக்கான பாஜக தலைவர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.
சதீஷ் மகானா
இதில் சதீஷ் மகானா, பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை துணைத் தலைவராக இருந்தவர். அவர் தமக்கு பாஜக சட்டசபை தலைவர் பதவி கிடைக்கும் என காத்திருந்த நிலையில் ஆப்பு வைக்கப்பட்டது.
ஓம் பிரகாஷ் சிங்
ஓம் பிரகாஷ் சிங், மிர்சாபுர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் அந்த தொகுதி கூஉட்டணி கட்சியான அப்னா தளுக்கு தாரை வார்க்கப்பட்டது.
லால்ஜி தாண்டன்
ராஜ்நாத்சிங்குக்காக லக்னோ தொகுதியை விட்டுக் கொடுத்த லால்ஜி தாண்டனுக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை.. ராஜ்யசபா சீட்டு கூட கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.
கல்யாண்சிங்
முன்னாள் முதல்வர் கலயாண்சிங், அம்மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் முகம். அவர் தனது மகன் ராஜ்பீர் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லையே என்ற கோபத்தில் இருக்கிறார்.
மன்வேந்திரா சிங்
லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்காத காரணத்தால் குன்வார் மன்வேந்திரா சிங்கும் அதிருப்தியில் இருக்கிறார்.
பாஜக தொகுதிகள்
இந்த நிலையில் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலானவை பாஜக வென்ற தொகுதிகள்.
வெல்லவே வாய்ப்பு இல்லை?
ஆனால் பாதிக்கும் மேலான தொகுதிகளில் பாரதிய ஜனதா வெல்லவே வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கு முன்பாக உட்கட்சி பூசலை சரி செய்தாக வேண்டிய கடுமையான நெருக்கடியில் பாஜக இருக்கிறது.












Click it and Unblock the Notifications