தொழிலாளர்களை மீட்க இரவு பகலாக போராடிய மீட்பு குழுவினர்.. பரிசுத்தொகை அறிவித்த உத்தரகாண்ட் முதல்வர்
டேராடூன்: உத்தரகாண்டில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
மீட்பு குழுவினருக்கு பாராட்டு: அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. அடுத்ததாக பிளான் பி படி மீட்பு பணிகள் தொடர்ந்தது. அதிலும் தொய்வு ஏற்பட்டதால் கடைசியாக எலி 'எலி வளை'நடைமுறையை பின்பற்றி சுரங்கத்தை அடைந்தனர். 17- வது நாளாக போராடி தற்போது இன்று இரவு 8 .30 மணியளவில் அனைத்து அதாவது 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த நிலையில் 17 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். உத்தரகாண்டின் சில்கியாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் கடந்த 17 நாட்களாக மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சி எந்த வகையிலும் வீண் போகவில்லை. 17-வதுநாளான இன்று நாடே எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி கிடைத்தது. ஆம். சுரங்கத்தில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்டனர்.
ஒரு லட்சம் நிதி உதவி: சுரங்கத் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட உடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் பெரும் நிம்மதியும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைந்தனர். மீட்பு பணியை நேரில் சென்று பார்வையிட்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியாக அளிக்கப்படும் என்றார்.
மேலும் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 15-30 நாட்கள் சம்பள பிடித்தமின்றி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுரங்கத்தின் முகப்பு பகுதியில் பாபா பைத்யநாத் கோவிலும் கட்டும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications