உத்தரகாண்ட்டில் மீண்டும் பெருவெள்ளம்: பாபா ராம்தேவ் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு!!
டேராடூன்: உத்தரகாண்ட்டில் கனமழை கொட்டுவதால் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்மாநிலத்தில் கங்கோத்ரியில் யோகா குரு பாபாராம்தேவ் மற்றும் அவர் அழைத்துச் சென்ற 450 மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதேபோல் இதர புனித தலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, இடிந்து விழுந்த பனிச்சிகரங்களால் பெருவெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். கேதார்நாத் என்ற புனித தலமே வெள்ளத்தில் மூழ்கிப் போனது.
இன்னமும் கூட கேதார்நாத் வனப்பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளத்தில் பலியானோரின் சடல எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் அங்கு பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் சென்ற யாத்ரீகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே தத்தளித்து வருகின்றனர்.
கங்கோத்ரி பகுதியில் அபாயகரமான அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கோத்ரி செல்லும் அனைத்து சாலைகளுமே வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டன.
கங்கோத்ரியில் சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார். அவர் அழைத்துச் சென்ற 450 யோகா மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநில அரசு விடுத்த எச்சரிக்கையையும் மீறி 450 பேரையும் ராம்தேவ் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை உடனடியாக மீட்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications