உத்தரகாண்டில் இன்றுடன் தேசிய விளையாட்டு போட்டிகள் 2025 நிறைவு! வீரர்களுக்கு அமித்ஷா பாராட்டு
டேராடூன்: கடந்த ஜனவரி 28ம் தேதி கோலாகலத்துடன் தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதில் சுமார் 10,000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றிருந்திருக்கின்றனர்.
நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு போட்டிகளின் மையமாக இந்தியா மாறி வருவதன் தொடக்கம்தான் இது என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் தேதி இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். களரி, யோகா, மல்லர் கம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் சர்வதேச விளையாட்டுகளும் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10,000க்கும் அதிகமான வீரர்கள்/வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
போட்டியின் முடிவுப்படி முதல் இடத்தில் சர்வீஸ் டீம் (Services Sports Control Board) 68 தங்கம் உட்பட 121 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் கண்ட்ரோல் போர்டு என்பது இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்படும் ஒரு விளையாட்டு வாரியமாகும். இது 1919 ஆம் ஆண்டு ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியமாக உருவாக்கப்பட்டது.
198 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், 153 பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் பிடித்திருக்கின்றன. மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றிருக்கின்றன.
இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகின்றன. நிறைவு விழாவில் அமித்ஷா பேசுகையில், "தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் இதே நாளில், விளையாட்டு போட்டிகளுக்கான மையமாக இந்தியா மாறுவதும் இன்றுதான் தொடங்குகிறது. விளையாட்டில் நாம் வெற்றி தோல்விகளை கற்றுக்கொள்கிறோம். நம்முடைய நாட்டிலும் துணிச்சலான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் உலகுக்கு உணர்த்த வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா விளையாட்டு போட்டியின் மையமாக மாறி வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications