மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்.. ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
டேராடூன்: 17 நாட்களாக சுரங்கத்தில் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. அடுத்ததாக பிளான் பி படி மீட்பு பணிகள் தொடர்ந்தது. இப்பாடியாக மீட்பு குழுவினர் 17- வது நாளாக போராடி தற்போது இன்று இரவு 8 .30 மணியளவில் அனைத்து அதாவது 41 தொழிலாலர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த நிலையில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "17 நாட்கள் போராட்டத்திற்கு பின் தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் நாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்ட தொழிலாளர்களுக்காக நாடே வணங்குகிறது.
மிகவும் கடினமான மீட்பு பணியில் மன உறுதியுடன் செயல்பட்ட மீட்பு குழுவினருக்கும் மற்றும் நிபுணர்களுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும், உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்த 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்வதாகவும், இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
#சில்கியாராசுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது. அயராத மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இயன்ற அனைத்து வளங்களையும் வழிநடத்திய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு சிறப்பு நன்றி.- ஆளுநர் ரவி pic.twitter.com/LbD6Kq4wpe
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 28, 2023
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- #சில்கியாராசுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது. அயராத மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இயன்ற அனைத்து வளங்களையும் வழிநடத்திய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு சிறப்பு நன்றி. இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications