நெருங்கிட்டோம்.. 2 மீட்டர்தான் பாக்கி! உத்தரகண்ட் சுரங்கத்திலிருந்து வெளியேறப்போகும் 41 தொழிலாளர்கள்
டேராடூன்: உத்தரகண்ட் சுரங்கத்தில் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இன்னும் 2 மீட்டர்கள் மட்டுமே துளையிட வேண்டி இருப்பதால், இன்னும் சில மணி நேரங்களில் மீட்புப் பணிகள் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாராவில் உள்ள சுரங்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. இதனால் கடந்த 17 நாட்ளாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.

தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் கிடைமட்டத்தில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. கடும் குளிரால் இந்த பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்ட நிலையில், ஆகர் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையே சுரங்கத்தில் உள்ள கான்கிரிட் கம்பிகள் காரணமாக துளையிடும் பணி பாதிக்கப்பட்டது. அகர் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட் கம்பிகளில் பட்டு உடைந்தன. இதனால் பல மணி நேரம் மீட்புப் பணி தாமதமானது. இரும்பு கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கின.
அவற்றை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த தடைகளை மீட்புப்பணியில் உள்ள வீரர்களை அனுப்பி சிறிய இயந்திரங்களை கொண்டு அகற்ற முடிவு செய்தனர். அந்த பணியில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில், வேறு வழிகளில் மீட்புப் படையினர் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணி நிறைவடைய 4 நாட்கள் வரை ஆகும் என நேற்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்னும் 2 மீட்டர் தூரம் மட்டுமே துளையிடும் வேலை இருப்பதாகவும், அது வெற்றிகரமாக முடிந்தால் இன்று மாலையே தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சுரங்க மீட்புக்காக கடைசி குழாய் அனுப்ப வேண்டும் என்றும், துளையிடும் பணியில் நேரடியாக வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சுரங்கத்தில் தவிக்கும் 41 தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கவும், அவர்களை தொடா்பு கொள்ளவும் 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. இதன் மூலமாக சுரங்கத்தில் உள்ள தொழிலாளா்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குழாயில் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு, சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை வீடியோ மூலம் கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில் அவர்களின் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. சமீபத்தில் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நேரத்தை செலவிட விளையாட்டு பொருட்கள் குழாய் மூலம் அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications