சட்டமன்றத்திலிருந்து நீதிமன்றம் சென்ற சமூகப் போராளி வி.ஆர்.கிருஷ்ணய்யர்!
மரணதண்டனையை மரணிக்கச் செய்யவேண்டும் என்று தன் மரணம் வரை குரல் கொடுத்தவர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் இந்திய சிறைச்சாலைகளில் உள்ள மரணக் கொட்டடிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசை.
அரசியல்வாதியாக இருந்து நீதியரசராக உயர்ந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் சட்டம் பயின்றவர்கள் பலரும் இன்று சட்டமன்றத்தில்தான் இருக்கின்றனர்.
நூற்றாண்டுகளை கடந்த இவர் இன்று நம்மிடையே இல்லை.
வழக்கறிஞராக, சிறை கைதியாக, சட்டமன்ற உறுப்பினராக, நீதியரசராக, பேராசிரியராக, சமூக போராளியாக பன்முகம் கொண்ட கிருஷ்ணய்யரை பற்றி தெரிந்து கொள்வோம்.
கேரளாவில் பிறப்பு
கிருஷ்ணய்யர் 1914 நவம்பர் 15ஆம் தேதி, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பாலக்காடு, வைத்தியநாதபுரத்தில் பிறந்தார். ஏழை தமிழ் பிராமண குடும்பத்தைச் இவர், தன் விடாமுயற்சியால் உயர்ந்த நிலைக்கு முன்னேறினார்.
தமிழகத்தில் கல்வி
கிருஷ்ணய்யரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்கறிஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார்.
கைதியாக கிருஷ்ணய்யர்
நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, காவல் துறை அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார் கிருஷ்ணய்யர்.
எம்.எல்.ஏவாக தேர்வு
பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்த லில் போட்டியிட்டபோது, வி.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.
சட்ட அமைச்சரானார்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957ஆம் ஆண்டில் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். தனது பதவிக்காலத்தில் இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
முறைகேடுகளை எதிர்த்து
1959ஆம் ஆண்டில் அவர் பங்கேற்றிருந்த அமைச்சரவை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது இதனையடுத்து மீண்டும் சட்டமன்றம் சென்றார்.
நீதித்துறையின் பொற்காலம்
அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார்.
1973ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 1980ல் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது பதவிக்காலம் நீதித்துறையின் பொற்காலமாக விளங்கியது.
நீதிமன்றத்தின் கதவுகள்
பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் இவரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பொதுநல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர்.
ஓய்வறியா நீதிமான்
1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்.
கவுரவ பேராசிரியராக
இந்தியாவில் அரசியல்வாதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர் இவர் ஒருவரே. கேரளா, கொச்சின் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். கேரளாவில் சட்ட அகாடமியை நிறுவினார். 105 புத்தகங்களை எழுதியுள்ளார். 1999ல் மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
மரணிக்காக தீர்ப்புகள்
கடந்த நவம்பர் 15ஆம் தேதி தனது நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடினார் கிருஷ்ணய்யர். நூறு ஆண்டுகளை நிறைவு செய்த இந்த நீதிதேவன் இன்று மரணத்தை தழுவினாலும் அவர் வழங்கிய தீர்ப்புகள் என்றும் மரணிப்பதில்லை.