இந்திராவால் சிறையில் தள்ளப்பட்ட வாஜ்பாய்.. எமர்ஜென்சி காலத்தில்!
டெல்லி: நாட்டின் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வாஜ்பாய்.
ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி கடந்த 1966-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார். அவரது காலத்தில் மிகவும் பரபரப்பான நிகழ்வு எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை ஆகும்.
கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி முதல் 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி வரை இந்திரா காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதை பிரதமர் இந்திரா பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவால் அமல்படுத்தப்பட்டது.

தேர்தலை சந்திக்கும் வரை
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 352-இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த எமர்ஜென்சி நிலை 21 மாதங்கள் நீடித்தது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நெருக்கடி நீடிக்கப்பட்டு 1977-ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்தது.

செல்லாது
லோக்சபாவுக்கு இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று 1975, ஜூன் 11ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழல் எதிர்ப்புப் போரை தீவிரப்படுத்தியிருந்தார்.

தெருக்களில் கூடிய மக்கள்
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தினர். ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர். இதையடுத்து நாடாளுமன்றக் கட்டடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன.

எமர்ஜென்சி
மேலும் பாகிஸ்தான் போர், எண்ணெய் நெருக்கடி போன்ற காரணங்களால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அரசு பணியாளர்கள் போராட்டங்கள் ஜனநாயகத்தை நிலை குலைய வைக்கும் என்பதால் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த இந்திரா காந்தி பரிந்துரைத்தார். அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வாஜ்பாய் கைது
அப்போது பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே அத்வானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். எமர்ஜென்சி நாள் தொடக்கமான ஜூன் 25-ஐ இன்று வரை எதிர்க்கட்சிகள் இருண்ட காலமாக அனுசரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications