வாஜ்பாயியின் காஷ்மீர் கனவை நனவாக்க பாடுபடுவோம்.. மோடி
ஸ்ரீநகர்: அமைதியான மாநிலமாக காஷ்மீரை மாற்ற நினைத்த, முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் கனவை நடைமுறைப்படுத்துவோம் என்று அம்மாநிலத்தில் நடந்த ரயில்வே திட்ட துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா-உதம்பூர் நடுவே ரயில் இயக்கத்தை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் பிரபல வைஷ்ணவி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி கூறியதாவது: வாஜ்பாயியின் காஷ்மீர் கனவை நனவாக்க பாடுபடுவோம். மோடி ஜம்மு காஷ்மீர் பல சோதனையான காலகட்டங்களை தாண்டி வந்துள்ளது.

இம்மாநிலம் முன்னேற வேண்டும், இங்குள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் பிற பகுதி மக்கள் விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் கடமை. அந்த கடமையை கட்டாயம் செய்து நிறைவேற்றுவோம். இந்த மாநிலத்தில் நாங்கள் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அக்கடமையை செய்வோம். ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த, வாஜ்பாய் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பயணத்தை நாங்கள் நிறைவு செய்ய உள்ளோம்.
அமர்நாத் யாத்திரையும், ரம்ஜானும் தொடங்கியுள்ள இந்த புனிதமான காலகட்டத்தில் ரயில் சேவையை துவங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்ரா ரயில் நிலையத்தால், ஜம்மு நகர மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக கூற வேண்டாம். வளர்ச்சி பணிகள் என்பது புனிதமானவை, ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றால் அதன் பயன் பிற பகுதியிலுள்ள மக்களுக்கும் சேர்த்தேதான் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹுரியத் மாநாட்டு கட்சி விடுத்திருந்த வேலை நிறுத்த அழைப்புக்கு வரவேற்பு கிடைத்திருந்தது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications