திசைக்கு ஒன்று... பெருநகரங்கள் 4... தங்க நாற்கர சாலை திட்டம் தந்த வாஜ்பாய்!
டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டத்தை தொடங்கி வைத்த பெருமை அடல் பிகாரி வாஜ்பாயையே சாரும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1998-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டமே தங்க நாற்கர திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே 4 முக்கிய பெருநகரங்களை சாலை வழி மார்க்கமாக இணைப்பது ஆகும்.
இதன் மூலம் விபத்தை குறைப்பது, பாதுகாப்பான பயணம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெயர் ஏன்
மிகவும் மகத்தான திட்டமான இது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்க 4 வழிப்பாதைகளாக உருவாக்கப்பட்டது. இந்த 4 நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாக இருந்ததால் இதற்கு தங்க நாற்கர திட்டம் என பெயரிடப்பட்டது.

தொடங்கப்பட்டது எப்போது
இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 4 நகரங்களும் 4 திசைகளில் உள்ளன. வடக்கில் டெல்லி, தெற்கில் சென்னை, கிழக்கில் கொல்கத்தா மற்றும் மேற்கில் மும்பை ஆகும். இந்த திட்டம் வாஜ்பாயால் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு முடிவுற்றது.

எந்த நகரங்கள்
பின்னர் இந்த திட்டம் மூலம் மேலும் பல நகரங்களும் இணைக்கப்பட்டது. அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கட்டாக், ஜெய்பபூர், கான்பூர், புனே, சூரத், விஜயவாடா, அஜ்மீர், விசாகப்பட்டினம். புத்தகயா, வாரணாசி, ஆக்ரா, காந்தி நகர், உதய்பூர் ஆகிய நகரங்களையும் இந்த சாலை இணைத்தது.

உலகில் 5ஆவது நீளமான சாலை
மொத்தம் 5,846 கி.மீ கொண்ட இந்த நாற்கர சாலை உலகிலேயே 5 ஆவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை டெல்லியிலிருந்து கொல்கத்தா வரை 1,453 கி.மீ.ரும், டெல்லி- மும்பையிலிருந்து 1,419 கி.மீ.ரும், மும்பை- சென்னை இடையே 1,290 கி.மீ.ரும், சென்னை - கொல்கத்தா இடையே 1,684 கி.மீ.ரும் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நீளமான தேசிய நெடுஞ்சாலை இதுவாகும்.
இந்த சாலைகள் வந்த பிறகுதான் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மிகப் பெரிய மறுமலர்ச்சியைக் கண்டது என்பதில் சந்தேகம் இல்லை. பயண நேரங்களும் வெகுவாக குறைந்தன.












Click it and Unblock the Notifications