ஜெய்ராம் ரமேஷ், டைம்ஸ் நவ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்த வசுந்தரா ராஜேவின் மகன்
ஜெய்பூர்: அரசுக்கு சொந்தமான தோல்பூர் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மீது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் அரண்மனை அரசுக்கு சொந்தமானது என்றும், அதை அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் அபகரித்துவிட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஜெய்ராம் ரமேஷ் மீது வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் தோல்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் தோல்பூர் அரண்மனையை துஷ்யந்த் அபகரித்துவிட்டதாக கூறிய டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு துஷ்யந்த் தோல்பூர் அரண்மனையை சீரமைத்து ஹோட்டல் ஒன்றை துவங்கினார். ஹோட்டலின் பங்குகளை ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் நிறுவனம் வாங்கியது.
ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. மேலும் வசுந்தரா ராஜே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து அரண்மனை விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.