தமிழகத்தில் நாளை பந்த்.. கறுப்பு தினமாக அனுசரிக்க கன்னடர்களுக்கு வாட்டாள் நாகராஜ் அழைப்பு #cauvery
பெங்களூர்: தமிழ் நாட்டில் நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினைக்காக பெங்களூரில் இன்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வாட்டாள், போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் செல்லும் நிலையிலும், அங்கு பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் நடைபெறும் பந்த்தை கன்னடர்கள் கறுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். நாளை நான் கறுப்பு சட்டை அணிய உள்ளேன். கன்னடர்களும் அவ்வாறே செய்ய வேண்டும். பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபடும் கன்னட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இத்தோடு இதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கன்னட அமைப்பினரை கைது செய்வது தொடர்ந்தால், கர்நாடக பந்த்துக்கு அழைப்புவிடுக்கப்படும் என்று காவல்துறைக்கு எச்சரிக்கைவிடுகிறேன். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.