காய்கறி வியாபாரி நள்ளிரவில் ஓட ஓட வெட்டிக் கொலை.... சிசிடிவி பதிவால் பரபரப்பு
அகமதாபாத்: காய்கறி வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளது. இந்தக் காட்சிகள் சிசிடிவி கேரமாவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்நகர் அம்பா சவுன் பகுதியில் ரபீக் மக்வானா என்பவர் காய்கறிக் கடையை நடத்தி வந்தார். கடந்த வியாழக்கிழமை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது கடைக்கு வந்து கடையை வேறு இடத்திற்கு மாற்று இல்லை என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மிரட்டியுள்ளார்கள்.

இதற்கு ரபீக் மறுத்ததால், அவரை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கத் தொடங்கியது. மேலும் கையில் கொண்டு வந்திருந்த வாள், பேஸ்பால் பேட் உள்ளிட்டவைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் ரபீக் ஓட தொடங்கினார். ஆனாலும் விடாத அந்த கும்பல் ரபீக்கை ஒட ஓட துரத்தி நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
ரபீக்கின் சகோதரர் இர்பான் மக்வானா போலீசாரிடம் சந்தீப்பரத்பாய், ஹர்தீக் உலுவா, சஜித், ஜித்துப்ரபாடி, ராஜா மிஜிக்வாலா, தாக்கு மற்றும் பெயர் தெரியாத இருவர் தனது சகோதரரை வெட்டிக் கொன்றதாக புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவியில் 8 பேர் ஓட ஓட விரட்டி ரபீக்கை வெட்டி கொலை செய்தது பதிவாகியுள்ள காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications