நடிகர் சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கின் தீர்ப்பு மார்ச் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!
ஜோத்பூர்: பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கின் தீர்ப்பு மார்ச் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட சூட்டிங் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன.
இதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடிகர் சல்மான்கான் சட்ட விரோத ஆயுதங்களை பயன்படுத்தி மான் வேட்டை நடத்தியதாக கூறப்பட்டது.
ஜோத்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
ஆனால் இதை எதிர்த்து சல்மான்கான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் கீழ் நீதிமன்றம் வழங்கிய தடையை நிறுத்தி வைத்தது.
அதே சமயம் சல்மான்கான் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் நடிகர் சல்மான்கான் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மீதான மான் வேட்டை வழக்கு நடந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென அடுத்த மாதம் 3-ந்தேதி சல்மான்கான் வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications