மருத்துவமனையில் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். வருமானத்திற்கு அதிகமாக ஓரளவுக்குதான், ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளதால், அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி அறிவித்தார்.
தீர்ப்பு ஒத்தி வைப்பு
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து ஹைகோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமிதவராய், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இன்று எதிர்பார்ப்பு
இதையடுத்து தீர்ப்பு வெள்ளிக்கிழமையான இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை வெளியான சுப்ரீம் கோர்ட் வழக்கு பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கு விவரம் இல்லை. இதனிடையே, வரும் 10ம் தேதியான, திங்கள்கிழமை முதல், 15ம் தேதியான சனிக்கிழமை வரை தசரா விடுமுறை காலமாகும். எனவே கோர்ட் மீண்டும், 17ம் தேதிதான் அலுவலை ஆரம்பிக்கும்.
தசரா விடுமுறைக்கு பிறகு
17ம் தேதி திங்கள்கிழமைதான் ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கில் எப்போது தீர்ப்பு என தெரியவரும். அனேகமாக 18ம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜெயலலிதா இன்னும் அதிக நாள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று, நேற்று அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி
பல்வேறு வகை சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிவரும் என்றும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோரும் அப்பல்லோவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.