செம மாஸ்.. அயோத்தி ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் 10 கோடி குடும்பங்கள்.. விஎச்பி-யின் மெகா பிளான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் 2019 ல் தீர்ப்பு வழங்கியது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டுவதற்கான பணி தொடங்கியது. ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை உருவாக்கினார். அதன்பிறகு 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து கட்டுமான பணிகள் தொடங்கியது. ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் ராமர் கோவிலின் தரைதளம் என்பது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மேலும் அவர் தற்போது தற்காலிகமாக ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அதனை கோவில் கருவறைக்கு ஊர்வலமாக எடுத்து வருவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த விழாவுக்கு இந்தியாவில் இருந்து ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், பாஜக தலைவர்கள், பிற அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இதுபற்றி அந்த அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், ‛‛உலகம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications