“அக்பருக்கு பக்கத்துல சீதாவா! சிங்கமா இருந்தாலும் பெயரை மாத்துங்க..” கோர்ட்டுக்கு ஓடிய விஎச்பி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு புதியதாக கொண்டுவரப்பட்ட அக்பர் என்று பெயரிடப்பட்ட ஆண் சிங்கமும், சீதா என பெயரிடப்பட்ட பெண் சிங்கமும் சேர்ந்து இருக்கக்கூடாது என்றும், பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
கடந்த 2014க்கு பிறகு, அதாவது மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாடு முழுவதும் மத கலவரங்கள், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மெய்பிக்கும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த வரிசையில் மற்றொரு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திரிபுராவின் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சிங்கங்களுக்கு ஏற்கெனவே அக்பர், சீதா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், இவரை இரண்டும் சேர்ந்து இருக்கக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினர் அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
"அக்பர் முகலாய பேரரசராக இருந்தாலும், சீதா என்பவர் புரான இதிகாசங்களில் வரும் பெண் தெய்வமாக போற்றப்படுகிறார். இப்படி இருக்கும்போது இரண்டு சிங்கங்களையும் எப்படி ஒன்றாக விட முடியும்?" என்று கேள்வி எழுப்பி, பெண் சிங்கத்தின் பெயரை சீதா என்று இல்லாமல் வேறு பெயரை மாற்ற வேண்டும் என விஎச்பி அமைப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது குறித்து விஹெச்பி நிர்வாகி துலால் சந்திர ரே கூறுகையில்,
“பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கத்திற்கு சீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இந்து மதம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய பெயரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் பெங்கால் சஃபாரி பார்க் இயக்குநரும் இணைக்கப்பட்டிருக்கிறார். மனு கடந்த 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி சவுகதா பட்டாச்சார்ய முன்பு பட்டியலிட்டுள்ளார். வழக்கு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications