டெல்லியில் துறவிகள் கூட்டம்.. விஎச்பி ஏற்பாடு.. 35 சாமியார்கள் பங்கேற்கிறார்கள்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் தனது உயர் நிலைக் கூட்டத்தை டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி கூட்டியுள்ளது. இதில் ஏராளமான சாமியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாபர் மசூதி இருந்த இடத்தை கையகப்படுத்தியது சரியா தவறா என்ற வழக்கின் அப்பீல் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது உச்சநீதிமன்றம். மேலும் அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29ம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து விட்டது. இதையடுத்து அயோத்தி வழக்கு விரைவுபடுத்தப்பட்டு தீர்ப்பும் வேகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையடுத்து விஸ்வ இந்து பரிஷத்தும் சுறுசுறுப்பாகியுள்ளது. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி உயர் மட்டக் குழுக் கூட்டத்தை அது கூட்டியுள்ளது. "உச்சியதிகார் சமிதி" அதாவது இந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ராமஜென்ம பூமி விவகாரத்தில் தொடர்புடைய அத்தனை சாமியார்களும் கலந்து கொள்ளவுள்ளனராம். டெல்லியில் உள்ள விஎச்பியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
30 முதல் 35 சாமியார்கள் வரை இதில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஎச்பி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் இதில் பங்கேற்பார்கள். அனைவரும் கூடி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கவுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதா, நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரச் சொல்வதா அல்லது புதிதாக இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பதா என்பது குறித்து இவர்கள் முடிவெடுக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications