சைபர் குற்றத்தில் பெங்களூரு முதல் இடம்... பிரச்சனையை சமாளிக்க போலீசாருக்கு கூடுதல் பயிற்சி
பெங்களூரு: ஐடியின் தலைநகரம் என்று சொல்லப்படும் பெங்களூரில்தான் அதிகப்படியான சைபர் குற்ற வழக்குகள் பாதிவாகியுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
2016ம் ஆண்டில் இதுவரை மட்டும், பெங்களூருவில் 135 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனைப் போன்றே ஆன் லைன் மூலம் பணமோசடி செய்த வழக்குகளும் இரட்டிப்பாகியுள்ளது. 2015ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் 2.35 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுவே இந்த ஆண்டில் இதுவரைக்கும் 7.70 கோடி ரூபாய் ஆன் லைன் மூலம் மோசடி நடந்துள்ளது.

சைபர் குற்றங்கள் குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்தும் ஏன் அதுகுறித்து பெரிய அளவில் பொறுப்புணர்வு அரசுக்கு உருவாகவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. ஆன்லைன் மோசடி மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து தற்போது ஆன்லைனில் புகார் கொடுக்க வழி உள்ளது என்றாலும் அதனை தடுக்கும் நடவடிக்கை குறைவாகவே உள்ளது.
கர்நாடகாவில் சைபர் குற்றப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கர்நாடக அரசு இது தொடர்பான பயிற்சி அகாமி ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். சைபர் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகளுக்கு இதுகுறித்த முறையான பயிற்சி இல்லை. கொடுமை என்னவென்றால் சைபர் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இங்கு வேலை செய்வது தண்டனை கால பணியாக கருதுகின்றனர். எனவேதான் சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.
சைபர் குற்ற வழக்குகளை எப்படி முறையாக விசாரிப்பது, எப்படி நடந்து கொள்வது, எப்படி தடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான சைபர் குற்றம் சார்ந்த பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.











Click it and Unblock the Notifications