சல்மான்கான் நடித்த படங்களை இப்போதும் பார்க்கிறேன்.. காலை இழந்தவர் பேட்டி!
மும்பை: நான் சல்மான்கான் நடித்த திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பேன் என்று கார் விபத்தில் காயமடைந்தவர் உருக்கமாக கூறினார்.
2002ல் சல்மான்கான் ஓட்டிய கார் மோதி ஒருவர் இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் அப்துல்லா ரவுப் ஷேக், ஒரு காலை இழந்தார்.

சல்மான்கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்த நிலையில், அவர் கூறுகையில், "கடந்த 13 வருடங்களில் என்னை பார்க்க யாரும் வரவில்லை. சிறு, தொழில் செய்துதான் பிழைப்பை நடத்தி வந்தேன். ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வந்தேன். இருந்தாலும், சல்மான்கான் பற்றி எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.. நான் இன்னும், அவரது படங்களை பார்த்துதான் வருகிறேன்.
சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்ததைவிட எனக்கு, நிவாரண நிதி கிடைப்பதைதான் விரும்புவேன். சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்து எனக்கு என்ன லாபம்? எனது தொழிலும், காலும்போய்விட்டதே..
சல்மான் கானுக்கு தண்டனை கிடைத்துவிட்டதால், எனது கால்கள் குணமடையப்போவதில்லை. எனது பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்றார்.
விபத்தில் இறந்த நூருல்லா மெகபூப் ஷெரிப் மனைவி கூறுகையில், எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த விலைவாசி உயர்வுக்கு நடுவே, இந்த நிதி எந்த மூலைக்கு போதும்.
எனது மகனுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.












Click it and Unblock the Notifications