வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக வெளியிடும்படி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
தற்போது விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன் பின்னர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விஜய் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்தபடியே வழக்கறிஞர் மூலம் இதற்கு பதில் மனு தாக்கல் செய்த விஜய் மல்லையா, தனது வெளிநாட்டுச் சொத்து விவரங்களைக் கேட்பதற்கு இந்திய வங்கிகளுக்கு உரிமை இல்லை என்றும், வங்கிகள் தனிநபர் ஒருவருக்கு கடன் வழங்கும்போது, அவரது வெளிநாட்டுச் சொத்துகளைக் கணக்கில் கொள்வதில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா விசாரணைக்குப் பயந்து தப்பி ஓடிவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறினார். வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்ற மல்லையா தரப்பின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விஜய் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
பெங்களூரில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது












Click it and Unblock the Notifications