டெல்லி செய்தியாளர்களிடம் எகிறிய விஜயகாந்த் ... "யாருடன் கூட்டணி வைத்தா உங்களுக்கு என்ன?"
டெல்லி: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போன தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் எகிறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சென்னை விமான நிலையத்தில் மூத்த செய்தியாளர் ஒருவர் விஜயகாந்திடம் இப்படி கேள்வி கேட்கப் போய் அவரது ஆதரவாளர்கள் தள்ளிவிட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் விஜயகாந்த். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜயகாந்த் அளித்த பதில்கள்:
கேள்வி: தமிழக பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமரையோ, குடியரசுத் தலைவரையோ சந்திக்கவில்லை என்று சொல்கிறீர்கள். மீனவர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணாமல் இருப்பதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா தான் என்று சொல்கிறீர்களா?
பதில்: உறுதியாக சொல்ல முடியும். அவர்கள் தானே தமிழக முதல்வர். போன ஆட்சியும் அதைத்தான் செய்தது. தமிழகத்தை இரண்டு கட்சிகள் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வஞ்சிக்கக் கூடாது என்பது எனது ஆசை.
கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தேமுதிக தீர்வு காணும் என்றீர்கள். தற்போது எதிர்க்கட்சியாக தேமுதிக உள்ளது. 33 மாதங்கள் கழித்து, காலதாமதமாக உங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன், பிரதமர் பதவிக் காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிய உள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளேதே. தேர்தலுக்கான சந்திப்பு என கருதலாமா?
பதில்: நான் ஏற்கனவே இங்கு உண்ணாவிரதம் இருந்தேன். அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான்.
கேள்வி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்கள்?
பதில்: இதைக் கேட்கவா வந்திருக்கிறோம். பிரதமரை சந்திக்கத்தான் வந்திருக்கிறோம். யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன. என் கட்சி ஜெயிக்கணும். தமிழக மக்கள் நல்லா இருக்க வேண்டும். அது நடக்கும்.
கேள்வி: தைரியம் இருந்தால் எங்களை கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் சொல்கிறார்களே?
பதில்: வேற கேள்வி
போயா.. டெல்லியிலும் எகிறினார் விஜயகாந்த்
அப்போது தமிழகத்தை சார்ந்த ராஜ் தொலைக்காட்சி செய்தியாளர் தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்து "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். விஜயகாந்துக்கு வந்த கோபத்துக்கு விட்டால் அடித்தே இருப்பார்போலத்தான்..!