இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் விஜயகாந்த்: பிரேமலதா
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டார். அவர் மக்களுக்காக உழைக்க இறைவனால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரதேச தேமுதிக சார்பில் நேற்று அங்குள்ள ஜந்தர் மந்தரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறுகையில்,

டெல்லி தமிழர்கள்
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே தமிழர்கள் டெல்லியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என்றார் பிரேமலதா.

உதவுவதில்லை
டெல்லிக்கு வரும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இங்குள்ள தமிழர்களை கூட்டம் கூட்ட பயன்படுத்துகிறார்களே தவிர அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பிரேமலதா குற்றம் சாட்டினார்.

பனங்காட்டு நரி
நலிவடைந்த ஏழை தமிழர்கள் ஜுக்கி ஜோப்டி என்ற குடிசைப் பகுதியில் தான் இன்றும் வசிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் தமிழர்களின் தலைவிதி மட்டும் அப்படியே தான் இருக்கிறது.
அதை மாற்றவே தேமுதிக டெல்லி வரை வந்துள்ளது. விஜயகாந்த் ஒரு பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டார் என்று பிரேமலதா கூறினார்.

இறைவனால் அனுப்பப்பட்டவர்
விஜயகாந்த் தான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார். டெல்லி தேர்தலில் தேமுதிகவுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கப் போகிறது என்று சிலர் ஏளனம் செய்கிறார்கள். தமிழகத்தில் கூட அவ்வாறு தான் கூறினார்கள். தேமுதிக 101வது கட்சி என்றார்கள். ஆனால் தற்போது தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சியாக தேமுதிக உள்ளது. மக்களுக்காக உழைக்க இறைவனால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். இனி மேல் டெல்லிக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்போம் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications