பதன்கோட் தாக்குதல் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை !
டெல்லி: பதன்கோட் விமானப் படை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை பொறுத்தே பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த 2 ஆம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் விமான கடத்தலில் தொடர்புடைய அவனது சகோதரனான அப்துல் ராப் அஸ்கர் உட்பட நான்கு பேரே காரணம் என்பதற்கான புலனாய்வு ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த போன் காலில் மூலமே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு கார் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தையும் இந்தியா வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு லாகூரில் சதித் திட்டம் தீட்டியதற்கான ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது. 'அந்த நான்கு தீவிரவாதிகள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் இடையே வரும் 15ஆம் தேதி தொடங்க இருந்த இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது..
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், எல்லைக் கடந்த பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பதன்கோட் தீவிரவாத தாக்குதல் எல்லை கடந்த பயங்கரவாத சவால் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பதை பொறுத்தே பேச்சுவார்த்தை நடைபெறும். பந்து தற்போது பாகிஸ்தான் கையில்தான் பாகிஸ்தானிடமிருந்து உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு இதுகுறித்து வேறு எதையும் கூறமுடியாது என்றார்.












Click it and Unblock the Notifications