பலாத்கார குற்றவாளியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - உ.பியில்!
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை அடித்துக் கொன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள கேரிகுஷ்நாம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித். நேற்று இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அஜித் சிங்கை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காயங்களுடன் இருந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதுவரை ஒன்பது பேரை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேவேளையில், இறந்துப்போன அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பலாத்கார புகார் அளித்துள்ளனர், இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.